Showing posts with label பச்சோந்தியும் பச்சை மயிலும். Show all posts
Showing posts with label பச்சோந்தியும் பச்சை மயிலும். Show all posts

Sunday, July 26, 2009

பச்சோந்தியும் பச்சை மயிலும்

பழங்காலத்துத் திரைப்பட நடிகை ஒருவர் கரப்பான் பூச்சியைக் கண்டால் மிரண்டுவிடுவாராம். கரப்பான்பூச்சியைக் காணவேண்டும் என்பது கூட அவசியமில்லை அதன் பெயரைக் கேட்டாலே இவர் கை கால் உதறுமாம்.

இந்த நடிகைக்கு இயல்பிலேயே ஓரளவு சிந்தனா சக்தி உண்டு. அப்படி இருந்தும், கரப்பான் பூச்சியால் தன்னுடைய உயிருக்கோ உடைமைக்கோ எந்த ஓர் ஆபத்தும் ஏற்படமாட்டாது என்பதை அவர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. எப்போதாவது அவர் அப்படி சிந்தித்துப் பார்த்திருந்தால், கரப்பான் பூச்சி என்ற பெயரைக் கேட்டதும் அவர் தம் நிலைகுலைந்து பதறித் துடிக்க மாட்டார்.

ஒரு பெரிய மதயானைகூட, நல்லபாம்பு கடித்தால் இறந்துவிடுமாம்! யானையைக் கொல்லக்கூடிய அளவுக்கு ஆற்றல் படைத்த அந்தப் பாம்மை, ஒரு மயில் கண்டால் தம் அலகினால் குத்திக் கொன்றுவிடும். அப்பேர்ப்பட்ட மயிலானது, தூரத்தே ஒரு பச்சோந்தியைக் கண்டுவிட்டால் பயத்தால் கதிகலங்கிப் போய்விடுமாம்.

பச்சோந்தியால் மயிலைத் துரத்திப் பிடிக்க முடியாது. அப்படியே துரத்தி வந்தாலும்; நல்ல பாம்பை குத்திக் கொல்லுகிற அதே அலகினால், மயிலானது பச்சோந்தியை மண்டையில் குத்திக் கொன்றுவிட முடியும். ஆனால் அந்தப் பச்சோந்தியைக் கண்டவுடன் மயில் என்ன செய்யும் தெரியுமா?

மயிலுக்கு இறகுகள் இருந்தாலும் அவற்றின் துணை கொண்டு அது பறந்தோட முயல்வதில்லை. பச்சோந்தி எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு மயில் தான் நின்ற இடத்திலேயே நின்றுவிடும். அது மட்டுமல்ல. சிறிது நேரத்தில் அது அந்தப் பச்சோந்தியை நோக்கி நடந்து செல்லவும் முற்படும். நடந்து சென்று தன்னுடைய கண்களைக் கொண்டுபோய் அந்தப் பச்சோந்திக்கு வலியக் கொடுக்கும். உடனே பச்சோந்தி அந்தக் கண்களைப் பறித்துச் சாப்பிட்டுவிடும். இப்படி ஒரு நம்பிக்கை நாட்டுப்புறங்களில் நிலவுகிறது!