Showing posts with label துணிந்து செயல்பட வைக்கும் சூழ்நிலைகள். Show all posts
Showing posts with label துணிந்து செயல்பட வைக்கும் சூழ்நிலைகள். Show all posts

Sunday, July 26, 2009

துணிந்து செயல்பட வைக்கும் சூழ்நிலைகள்

புதிய வழி என்கிறபோது, அதுவரையில் அவர் செய்து பழக்கமில்லாத ஒரு வழியாகத்தான் இருக்கும். பழக்கமில்லாத எந்த ஒரு காரியத்தையும் முதல் தடவையாகச் செய்யும்போது, அதற்குத் துணிவு தேவை.

ஏற்கனவே அடைந்துள்ள ஓர் இழப்பை ஈடு செய்வது என்றால், அதற்காகச் செய்யப்படுகிற முயற்சி, ஒரு பெரிய இலாபத்தைத் தரக்கூடியதாக அமைய வேண்டும். சிறிய இலாபத்தைக் தரக்கூடிய சிறு முயற்சிகளால், அவருடைய நெருக்கடி தீரப் போவது இல்லை. எனவே, அவர் இறங்கியே ஆக வேண்டும்!

பெரிய முயற்சிகளின் மூலமாகத்தான் பெரிய இலாபங்களை அடைய முடியும். அப்படி இருந்தும், இதுவரை அவர் ஏன் பெரிய முயற்சிகளில் இறங்காமல் இருந்தார்?

காரணம், பெரிய முயற்சிகளின் மூலமாகப் பெரிய இலாபங்களை அடைவதற்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ, அவ்வளவு வாய்ப்பு பெரிய நஷ்டங்களை அடைவதற்கும் அதிலே இருக்கிறது! பெரிய இலாபங்கள் வருமானால் அது மகிழ்ச்சிக்கு உரியதே; ஆனால் பெரிய நஷ்டங்கள் வந்தால் என்ன செய்வது? இந்த பயத்தில்தான் அவர் இதுவரை எந்த ஒரு செயல் முயற்சியிலும் இறங்காமல், சாதாரண முறையிலேயே தன்னுடைய தொழிலை நடத்திக் கொண்டு வந்தார். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

எதாவது ஓர் ஆபத்தான முயற்சியை மேற்கொள்வதன் மூலமாகத்தான், அவர் தன்னுடைய நெருக்கடிகளை இப்போது சமாளிக்க முடியும். இதுபோன்ற கட்டாயத்துக்கு ஆளான பிறகு, அவர் இனியும் தயங்கிக் கொண்டிருக்க முடியாது. தன்னுடைய பொருளாதார அழிவைத் தவிர்ப்பதற்காக, அவர் துணிந்து செயல்பட்டுத்தான் ஆகவேண்டும், வேறு வழி இல்லை.

துணிவினால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதற்கு, இப்போது அவருக்கு நேரம் கிடையாது. புலியால் துரத்தப்படுகிறவன் தண்ணீரில் மூழ்கிவிடுவோமோ என்று அஞ்சிக்கொண்டிருக்க முடியுமா? அதேபோல் அவரும் தன்னுடைய புதிய முயற்சியால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்க முடியாது.

புதிய முயற்சி ஒன்றைச் செய்யாமல் இருந்தால்தான் வீழ்ச்சயடைவது உறுதி என்று அவர் உணர்கிறார். புதிய முயற்சியைச் செய்வதால் ஒருவேளை அந்த வீழ்ச்சிக்கு ஆளாகாமல் தப்பிவிடலாம் அல்லவா? அந்த ஒரு நம்பிக்கையால் அவர் துணிவுடன் அந்தப் புதிய முயற்சியில் இறங்கித்தான் ஆகவேண்டும்.