Friday, May 17, 2013

ஐயகோ! சீனா இந்தியாவில் கால் பதித்து விட்டது!


"இலங்கையில் சீனா முதலிட்டு வருகின்றது, ஆழமாக கால் பதித்து விட்டது, அது இந்தியாவுக்கு ஆபத்து..." என்று சிலர், இந்திய அரசுக்கு கோள் மூட்டிக் கொடுத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இன்னமும் 1962 ம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

1962 ம் ஆண்டு, இந்திய - சீன எல்லைப் போர் நடந்ததும், அன்றில் இருந்து இரண்டு நாடுகளும் பகைவர்களாக நடந்து கொண்டதும் கடந்த கால வரலாறு. ஆனால், 21 ம் நூற்றாண்டில் உலகம் தலைகீழாக மாறி விட்டது. இன்றைக்கு இந்தியாவின் முதன்மையான வர்த்தகக் கூட்டாளி யார் தெரியுமா? நம்பினால் நம்புங்கள், அது சீனா தான்! இதனை நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்பது தெரியும். வேறு யார் சொல்ல வேண்டும்?  CIA யின் வருடாந்த அறிக்கையில், சீனா இந்தியாவின் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 

இந்தியப் பொருளாதாரம், தொண்ணூறுகளுக்கு பின்னர் தாராள மயப் படுத்தப் பட்டது. அப்போது அது, மேற்கத்திய நாடுகளின் முதலீட்டை எதிர்பார்த்திருந்தது.  குறிப்பாக, இயந்திரங்கள் போன்ற பெரும் மூலதனத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களை, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து தருவிக்க வேண்டியிருந்தது. ஆனால், காலப்போக்கில் சீனா உலகில் பெரிய பொருளாதார வல்லரசாக மாறி வருகையில், இந்தியாவினால் அதனை தவிர்க்க முடியவில்லை. மேற்கத்திய நாடுகளிடம் வாங்க வேண்டிய அதே பொருட்களை, சீனாவிடம் குறைந்த விலைக்கு வாங்க முடிகின்றது. இன்று சீன உற்பத்தி சாதனங்கள், அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.  இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக உறவில், சீனாவே ஆதிக்கம் செலுத்துகின்றது. ஏனென்றால், இன்று பெரும்பான்மையான இந்திய இறக்குமதிப் பொருட்கள் சீனாவில் வாங்கப் படுகின்றன. கடந்த வருடம் அது 12% மாக இருந்தது. அதே நேரம், சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 6.3% மட்டுமே. (ஆதாரம்: CIA  World Fact Book) இரு தரப்பு வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுக்கு காரணம், சீனாவுக்கு அவசியமான பொருட்கள் பல பொருட்கள் இந்தியாவிடம் கிடையாது. குறிப்பாக, பருத்தி, மற்றும் கனிமப் பொருட்கள் போன்ற மூலப் பொருட்கள் தான் முக்கியமான ஏற்றுமதியாக இருக்கின்றன. இரு தரப்பு வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு நிரப்பப் பட வேண்டும் என்பது இந்தியாவின் கவலையாக உள்ளது. சீன தரப்பிலும் அதன் முக்கியத்துவம் உணரப் பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக, சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலிட்டு தொழில் நடத்த வேண்டும் என இந்திய அரசு விரும்புகின்றது.

"தமிழினக் காவலர்" வைகோ, இந்திய அரசுக்கு (அல்லது தமிழர்களுக்கு) சீனப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரம், அவரது மதிமுக கூட்டணி அமைத்துள்ள பாஜக, இந்தியாவில் சீனா முதலிட வேண்டுமென வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது.  "வருங்கால பிரதமராக" கருதப்படும், குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, 2011 ல் சீனாவுக்கு விஜயம் செய்த நேரம், தனது மாநிலத்தில் சீனா முதலீடு செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார்.   

சீன அரசின் முதலீட்டு வங்கி, இந்தியாவில் கிளையை திறந்துள்ளது. இதன் மூலம், தற்போது இலங்கைக்கு கிடைப்பதைப் போன்று, சீனக் கடன்கள் இந்தியாவுக்கு கிடைக்கலாம். இலகுவான சீனக் கடன்கள், சீன முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், நிபந்தனைகளும் குறைவாக இருக்கும் என்பதால், இந்தியா விரும்பி ஏற்றுக் கொள்ள இடமுண்டு. அதற்கு மாறாக, IMF இடம் கடன் வாங்குவதற்கு முன்னர், மனித உரிமைகள் பாடம் படிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவில் நுழைய விசா மறுக்கப்பட்ட, "குஜராத் இனப் படுகொலையாளி" நரேந்திர மோடி, எதற்காக சீனாவுக்கு சென்றார் என்பது இப்போது புரிந்திருக்கும். 

முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில், சீன நிறுவனம் ஒன்று, இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவி உள்ளது. 70 மில்லியன் டாலரில் ஆரம்பிக்கப்பட தொழிற்சாலை, எல்லாம் நல்ல படியாக நடந்தால், முதலீட்டை இரட்டிப்பாக்கப் போவதாக அதன் நிர்வாகி தெரிவிக்கின்றார். இதை விட, குறைந்தது 10 சீன நிறுவனங்கள் ஏற்கனவே தொழிலகங்களை நிறுவத் தொடங்கி உள்ளன. 100 நிறுவனங்கள் தமது அலுவலகங்களை திறந்துள்ளன. சூரிய சக்தியில் இயங்கும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, இந்திய சந்தைக்கான பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளது. உலகில் பிரபலமான கைத் தொலைபேசி தயாரிப்பாளரான Huawei பெங்களூரில் ஒரு ஆய்வு மையத்தை கட்டி வருகின்றது. 

இந்தியாவும், சீனாவும் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டுள்ளன. ஆனால், சீனாவின் வளர்ச்சி இந்தியாவினுடையதை விட பன்மடங்கு அதிகமானது என்ற உண்மையையும் மறுக்க முடியாது. இருபது வருடங்களுக்கு முன்னர் சீனா  இருந்த நிலையில், இன்று இந்தியா இருப்பதாக இந்திய பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது, அந்த இருபது வருட காலங்களும் இந்திய சந்தை திறந்து விடப் பட்டிருந்தது. "இந்தியாவை வளப்படுத்தி வல்லரசாக்கும்", என பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட மேற்குலக நாடுகள், இந்தியாவை ஏமாற்றி விட்டதாக உணரும் காலம் வந்துள்ளது. அதே நேரம், இன்று மேற்குலக நாடுகள் கூட சீனாவில் தங்கியுள்ளன, என்ற யதார்த்தத்தையும் இந்தியா புரியாமல் இல்லை. 

No comments:

Post a Comment